அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 16 August 2012

குர்ஆனைத் தொடமுடிந்த தூய்மையானவர்கள்!

முதல் பாகத்தைக் காண‌:-  திருக்குர்ஆனைத் தொடக் கூடாதாமே?!!

லுஹர் நேர தொழுகையை இருவரும் நிறைவேற்றிய பிறகு காமிலா தன் தாயாருக்கு விளக்க ஆரம்பிக்கிறாள்.

காமிலா: இப்போ சொல்லட்டா..ம்மா?

ரமீஸா: ம்... சொல்லு, சொல்லு..! இப்போ கொஞ்ச ஃப்ரீ டைம்தான நமக்கு.. அஸர் நேரம் வந்துட்டா தொழுதுட்டு இஃப்தார் வேலைகள ஆரம்பிக்கதான் சரியா இருக்கும்.


காமிலா: சரி ஓகே..., இப்படி வந்து உக்காருங்க... ம்மா சொல்றேன்.

குர்ஆன "தொட மாட்டார்கள்"னா "தொட இயலாது", அதாவது "தொடுறதுக்கு சக்தி பெறமாட்டார்கள்" அப்படீங்கிற ஒரு மெஸேஜ்தான் அந்த (56:79) ஆயத்துல‌ சொல்லப்பட்டிருக்குன்னு சொன்னேன்ல‌.. அந்த மெஸேஜுக்கு பின்னால உள்ள சம்பவத்தயும் சொல்றேன் கேளுங்க...!

நபி(ஸல்) அவங்க அல்லாஹ்விடமிருந்து இறைச் செய்தி கெடச்சவுடனே தன்னோட உறவினர்களா இருந்த குரைஷி குலத்தவங்கள்ட்டதான் அழைப்பு பணிய தொடங்குனாங்க. பல தெய்வக் கொள்கையில இருந்த அந்த குறைஷிகளால‌ ஒரே கடவுள் கொள்கைய உடனே ஏத்துக்க முடியல. அதனால நபி(ஸல்) அவங்க அழைப்பு பணி செஞ்ச ஆரம்ப கட்டத்துலயே அவங்க அத தொடரவிடாம பண்ணிடணும்னு பலமாதிரி ஐடியா பண்ணினாங்க. அதனால நபி(ஸல்) அவங்களோட அந்த ஏகத்துவ பிரச்சாரத்த‌ மக்கள் காதுல வாங்கிட்டு சிந்திக்கக் கூடாதுன்னு எக்கச்சக்கமான‌ பொய்ப் பிரச்சாரங்கள குறைஷிங்க செய்ய ஆரம்பிச்சாங்க. அதுல ரொம்ப முக்கியமானதுன்னு சொன்னா... குர்ஆனப் பத்தி கற்பனையாவும், பொய்யாவும் அந்த எதிரிங்க பரப்புன‌துதா(ன்)! ஏன்னா... உண்மையிலயே நடுநிலையா மனசு வச்சு சிந்திச்சு பார்க்குறவங்களுக்கு குர்ஆனுல உள்ளதுலாம் இறைவனோட வார்த்தைகள்னு அப்பட்டமா புரியிற மாதிரி இருக்குறதுனால, முதல்ல அதுக்கு களங்கம் பண்ணுவோம்னு ப்ளான் பண்ணினாங்க அந்த குறைஷிங்க. அதுக்காக.. குர்ஆன பொய்யாக்க‌ என்னலாம் சொன்னாங்கன்னா....

* 'குர்ஆனுல இருக்குறதுலாம் முஹம்மத் (நபி)க்கு சிந்தனை சிதறிப்போனதால சொன்னது'ன்னு சொன்னாங்க,
* 'அவர் தானாவே கற்பனைப் பண்ணி இறைவனோட வேதம்னு பொய் சொல்றார். அவரோட உள்ள மற்ற மக்களும் அதுக்கு ஹெல்ப் பண்ணிட்டிருக்காங்க'ன்னு சொன்னாங்க,
* 'அவர் ஒரு கவிஞரா தெரிகிறார். அதனாலதா(ன்) குர்ஆனோட வார்த்தைகள இவ்ளோ இலக்கிய நயமாஅமைக்க முடியுது'ன்னு சொன்னாங்க,
* 'பொய்யான கனவுகள நைட்ல பார்த்துட்டுதா(ன்) பகல்ல அத வசனமா ஓதிக் காட்டுறார்'னு சொன்னாங்க,
* 'யாரோ ஒரு மனிதர்தா(ன்) குர்ஆன இவருக்கு கற்றுத் தர்றார்'னு சொன்னாங்க,
* 'இந்த குர்ஆன் பழ‌ங்காலத்துல வாழ்ந்த முன்னோர்களோட‌ கட்டுக்கத'ன்னு சொன்னாங்க.

ரமீஸா: அஸ்தக்ஃபிருல்லாஹ்.......! இப்புடிலாமா சொன்னாங்க..? 

காமிலா: ஆமாம்..மா! ஒவ்வொரு சூழ்நிலைக்கி ஏத்த‌மாதிரி அந்த குரைஷிங்க எப்படிலாம் ரூம் போட்டு இவ்ளோ தூரம் யோசிச்சிருப்பாய்ங்களோ தெரியல... ஆனா அது அத்தனைக்கு(ம்) தெளிவான முறையில‌, அதே குர்ஆன் மூலமாவே ஆணித்தரமான‌ பதில்கள அல்லாஹ்தஆலா இறக்கிட்டுதான் இருந்தா(ன்), சுப்ஹானல்லாஹ்! இப்படிலாம் சொன்ன குரைஷிங்களோட அந்த பொய்ப் பிரச்சார/கற்பனை லிஸ்ட்ல ஒண்ணாதான்.. இன்னொண்ணும் சொன்னாங்க‌. அது என்னன்னா... 'ஜோசியம்/குறி சொல்றவங்களுக்கு ஒருசில நேரத்துல ஜின் ஷைத்தான்கள் ஒட்டுக்கேட்டு வந்து செய்திகள போட்டுக் கொடுக்குற மாதிரி, நபி(ஸல்) அவங்க கிட்டயும் ஜின் ஷைத்தான்கள்தா(ன்) குர்ஆன கொண்டு வருது' அப்டீன்னாங்க. அத மறுக்கதா(ன்)..., 'தூய்மையான வானவர்கள் கையில குர்ஆன நா(ன்) பாதுகாத்து வச்சிருக்கும்போது ஷைத்தான்களால அத எப்படிபா தொட முடியும்னு சொல்லி அல்லாஹ்தஆலா ஒரு போடு போட்டான்! அந்த ஆயத்து இதோ இருக்கு பாருங்க... ம்மா!
"இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்". (அல்குர்ஆன் 26:210-212)
இதே கருத்ததா(ன்) நீங்க‌ முதல்ல சொன்ன அந்த (56:79) ஆயத்திலும் அல்லாஹ்தஆலா சொல்லிக் காட்டுறான்.
"இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது". அல்குர்ஆன் (56:77-79)
ஆனா.. குர்ஆன தொடக்கூடாத சுத்தமில்லாதவங்கன்னு ஹஜ்ரத் சொன்னதா ஒரு லிஸ்ட் சொன்னீங்களே... அந்த லிஸ்ட்டில் இல்லாதவங்க மட்டுந்தான் "தூய்மையானவர்கள்"னு  தப்பா புரிஞ்சிட்டுதான் அப்படி எல்லா நேரத்துலயு(ம்), எல்லோரும் குர்ஆன தொடக் கூடாதுன்னு சில பேரு சொல்லிட்டு இருக்காங்க..ம்மா! நா(ன்) காலைல உங்களுக்கு சில‌ ஆயத்த (80:11-14 ) வாசிச்சு காட்டினேனே....
"அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு, உயர்வாக்கப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில் உள்ளது".

இதோட‌ தொடர்ச்சியில வர்ற அடுத்தடுத்த வசனங்கள‌யும் பாருங்க,
"மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது". (அல்குர்ஆன் 80:15,16)
இங்க‌ "நல்லோர்களான எழுத்தர்கள்"னும், சொல்றா(ன்) பாருங்க... ம்மா! அதாவது அந்த (56:79) வசனத்தில சொல்லப்பட்ட "தூய்மையானவங்க"ன்னா யாருங்கிறத தெளிவுபடுத்துகிற விதமா இருக்குல்ல‌ இந்த ஆயத்து..?

ரமீஸா: எப்புடி எப்புடி..? கொஞ்சம் கவனிக்காம இருந்துட்டேனே.... இன்னுங்கொஞ்சம் விளக்கமா சொல்லு..?

காமிலா: அதாவதுமா..., பாதுகாக்கப்பட்ட "லவ்ஹுல் மஹ்ஃபூல்" ஏட்டுல‌ எழுதவும், அதை பாதுகாக்கவும் அல்லாஹ்வால் நியமிச்சு வைக்கப்பட்ட அந்த‌ மலக்குமாரு (வானவர்)ங்க இருக்காங்கள்ல..? அவங்களுக்கு எழுதுற வேலை ஆரம்பத்துலயே முடிஞ்சிடுச்சு. அவங்களோட இன்னொரு ட்யூட்டிதான் ஷைத்தான்களால குர்ஆன தொட முடியாதபடியும், செவியேற்க முடியாதபடியும் அத காவல் காப்பது. இத நபி(ஸல்) அவங்களுக்கு குர்ஆன இறக்கியப்போ, அதாவது அவங்கள‌ நபியாக ஆக்கியப்போ அல்லாஹுதஆலா இந்த அரேஞ்ச்மெண்ட்ட செஞ்சி வச்சிருந்தத..தான், 80:11-16, 26:210-212, 56:77-79 இந்த வசனங்கள்ல அல்லாஹ்வே சொல்லிக் காட்டுறான். அந்த‌ மலக்குமாருங்க‌ கையில இருக்குற ஏட்டுல பதியப்பட்ட‌ குர்ஆனதா(ன்) மத்த யாராலும் தொட முடியாதுன்னும் சொல்றான்.

ரமீஸா: ஓ.. அப்புடியா...?! ஒவ்வொரு ஆயத்தும் என்னமாதிரி அழகா சொல்லுது பாரேன்..!!

காமிலா: ம்...! இமாம் மாலிக் அவங்களும் "முஅத்தா" அப்படி..ன்ற தன்னோட நூல்..ல இந்த 56:79 வசனம் சம்மந்தமா சொல்லும்போது, ஒரு ஆயத்துக்கு இன்னொரு ஆயத்து விளக்கமா அமைஞ்சிருக்கிறத சொல்றாங்க பாருங்க,
"தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்" என்ற (56:79) வசனம் தொடர்பாக நான் செவியேற்றதில் மிகவும் அழகானது, 'அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார்.  இது தூய்மைப் படுத்தப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது.  மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கையில் உள்ளது'.  (80:11-16) என்ற "அபஸ வதவல்லா" என்னும் அத்தியாயத்தில் கூறப்பட்ட இவ்வசனம்தான்!
இப்னு அப்பாஸ்(ரலி) அவங்க இந்த ஆயத்துக்கு விளக்கம் சொல்லும்போது சொல்றாங்க,
"தூய்மையானவர்கள்" என்பது வானவர்களையும், "குர்ஆன்" என்பது வானத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள குர்ஆனையும்தான் குறிக்கும். (நூல்:தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்:4, பக்கம்: 299)
ஆக... இந்தளவுக்கு தெளிவான செய்திகள பார்க்கும்போது, "தூய்மையானவங்க" அப்படிங்கிறவங்க‌ வானவர்களதான் சொல்லப்படுதுன்னும், "அதை" ங்கிறது, விண்ணுலகத்துல உள்ள ஏட்டுல‌ உள்ள குர்ஆனுங்கிறதும் தெளிவாக வெளங்குது நமக்கு!

ரமீஸா: குர்ஆன்லேர்ந்தே இவ்ளோ தெளிவா புரியுதே! அப்போ எதுக்கு இவ்ளோ கட்டுப்பாடுலாம்?

காமிலா: ஆமா..ம்மா! குர்ஆனோட சம்பந்தப்படுத்தி அல்லாஹ்தஆலா சொல்ற "தூய்மையானவங்க"லாம் பாவம் செய்யாத, தூய்மையான படைப்பினங்களா படைக்கப்பட்ட வானவர்கள் (மலக்குமார்கள்)தான் அப்ப‌டீங்கிறதையும் மக்கள் புரிஞ்சிக்கிறதில்ல! அதுமாதிரி இங்க சொல்லப்படுற தூய்மை நம்மகிட்ட இருக்குற வெளிப்புறத் தூய்மைன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டதுனாலதா(ன்) குர்ஆன தொடவும், ஓதவும் இவ்ளோ தூரம் தேவையில்லாத கட்டுப்பாடுகள போட்டு வச்சிக்கிட்டோம்.  இதுக்கு பாமர மக்கள சொல்லி குத்தமில்லமா... அப்படி சொல்லுற‌ ஹஜ்ரத்துகளதா(ன்) கேட்கணும்!

ரமீஸா: சரி... ஆயத்துகள்லாம் நீ சொன்ன மாதிரி வெளக்கமா, தெளிவாதா(ன்) புரியுது. ஆனா நம்ம ஹஜ்ரத்.. 'குர்ஆன எல்லா நேரத்துலயும் தொடக் கூடாதுங்கிறது'க்கு நெறைய ஹதீஸ்லாம்கூட ஆதாரமா சொன்னாரே..? அப்போ அதெல்லாம்..?

காமிலா: சொல்லியிருப்பாருதா..ம்மா! ஆனா அது சம்பந்தமா  வர்ற‌ ஹதீஸ்கள்லாம் ஒண்ணுகூட ஸஹீஹானது இல்லமா! பலஹீனமான, ஆதாரமில்லாத செய்திகள அது என்ன தரத்துல இருக்குங்கிறத, ஏத்துக்க முடிகிற உண்மையான ஹதீஸ்ங்கதானா..ங்கிறதலாம் பார்க்காம‌ ஹதீஸ்னு எழுதி வச்சிருக்கிறதலாம் சொன்னா அவங்க எப்பேற்பட்ட அறிஞர்னு மக்கள் சொல்லிக்கிட்டாலும் இதுக்குலாம் அவங்க‌தா(ன்) அல்லாஹ்கிட்ட பதில் சொல்லணும்!

ரமீஸா: அந்த ஹதீஸ்லாம் ஆதாரமில்லாதது..ங்கிறதுக்கு உங்கிட்ட வெவ‌ரம் ஏதும் வச்சிருக்கியா இப்போ..?

காமிலா: ஆமா, வச்சிருக்கேம்மா! தேவைப்படும்னு சொல்லி என்னோட 'பென் டிரைவ்'ல நேத்துதா(ன்) எல்லாத்தையும் ஏத்தி வச்சேன். இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு பிரிண்ட் பண்ணி தர்றேம்மா, நீங்களே பாருங்க!

ஷாஹினா: அக்கா... சொல்ல மறந்துட்டே..ங்க்கா! அன்றைக்கு உன்னோட ஃப்ரெண்ட் கவிதாக்கா வந்திருந்தப்போ... குர்ஆன படிச்சு பார்க்க ஆசையா இருக்குன்னு கேட்டாங்களா... அப்போ உம்மாதா(ன்) 'அவங்கள்லாம் அத‌ தொடக்கூடாது'ன்னு சொல்லி கொடுக்கவிடாம இருந்துட்டாங்க!

ரமீஸா: ஆமா..ன்டி, இவ.. வேற! இவ்ளோ நேரமா சொன்ன மத்ததெல்லாம் சரிதா(ன்).. அதுக்காக மாற்று மதத்துகாரவங்க கையில போய் குர்ஆன நாம கொடுக்கமுடியுமா என்ன..? என்னதா(ன்) இருந்தாலும் அவங்க குர்ஆன தொடலாம்னு சொல்றத என்னால ஏத்துக்கவே முடியல! ஏன்னா.. நீ சொல்ற மாதிரி "தூய்மை"ன்னு சொல்லப்படுறது உடல் தூய்மை இல்ல, பாவம் செய்யாத மலக்குமார்களின் தூய்மையைக் குறிக்குதுன்னா... மாற்று மதத்துகாரவங்க செய்யிற‌ படு மோசமான பாவமான‌ ஷிர்க் (இணை வைத்தல்)ங்கிறது அவங்கள அசுத்தமாக்காதா..?

காமிலா: என்னம்மா நீங்க... குர்ஆன கவிதா கேட்டதுக்கு கொடுக்காமலா இருந்தீங்க..?? அவங்கள்லாம் அல்லாஹ்வுக்கு இணை வக்கிறாங்கன்னா, அவங்களோட பெத்தவங்க சொல்லிக் கொடுக்கிறத உண்மன்னு நம்பி ஃபாலோ பண்ணிட்டு அப்படியே வளர்ந்ததுனால...மா! அதுக்காக அசுத்தம்னு சொல்லி அவங்கள ஒதுக்க சொல்லி நம்ம மார்க்கம் சொல்லலியே..ம்மா?

(காமிலா பதறியவளாய் கேட்கிறாள்)

ரமீஸா: நா(ன்) எங்கே ஒதுக்கியா வச்சேன்..? குர்ஆன அவங்கள்லாம் தொடுறது மனசு வராம.. அத கொடுக்காமதான‌ இருந்தேன்..?

காமிலா: இறைவனுக்கு அவங்க இணை வக்கிறது சரியான வழி இல்லன்னாலும்... நேர்வழிய தெரிஞ்சிக்கிறதுக்கு நாம எதுக்குமா அவங்களுக்கு முட்டுக்கட்டையா இருக்கணு(ம்)..? நாந்தான் முன்னாடியே சொன்னேனேம்மா.., இஸ்லாத்த ஏற்காத ரோமாபுரி மன்னருக்கும் பல நாடுகளின் தலைவர்களுக்கெல்லாம் நபி(ஸல்) அவங்க திருக்குர்ஆன் வசனத்த எழுதி அனுப்புனாங்க..ன்னு? அல்லாஹ்வும், ரசூலும் தடுக்காத விஷயத்த நாம தடுக்குறதுக்கும், கொடுக்காம தடுத்து வச்சிக்கிறதுக்கும் நமக்கு என்னமா அதிகாரம் இருக்கு மார்க்கத்துல..? இதுபோன்ற மார்க்கத்துல இல்லாத கடுமையான கட்டுப்பாடுகள், தேவையில்லாத தடைகள்லாம் குர்ஆன விட்டும் மக்களை அந்நியப்படுத்தி விடாதாமா? அப்படி ஒரு பாவத்த நாம் செஞ்சிட்டு அல்லாஹ்கிட்ட நாம என்ன பதில் சொல்வோம் சொல்லுங்க...?? எல்லா மக்களுக்கும் நேர்வழி காட்டுறதுக்காகதானே இந்த திருக்குர்ஆன அல்லாஹ் கொடுத்திருக்கான்? முஸ்லிம் அல்லாதவங்க குர்ஆன வாசிச்சாதான‌ அவங்களும் நேர்வழி பெறமுடியும்? நமக்கு தனிப்பட்ட எந்த ரைட்டுமில்லாம அவங்கள நாம தடுத்தா... குர்ஆன எந்த நோக்கத்துக்காக அல்லாஹ்தஆலா மக்களுக்கு அருளினானோ அந்த நோக்கத்த நாம திசை திருப்புன பாவமா ஆகாதாமா?

(அதுவரை அமைதியாக விளக்கம் சொல்லிக் கொண்டு வந்த காமிலா, தன் தாயார் அறியாமையினால் செய்த தவறைக் கேட்டு பொறுமை இழந்து கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.)

காமிலா: குர்ஆன் எல்லாருக்கும் பொதுவானது.. ங்கிறதுனாலதா(ன்).. குர்ஆன்ல எத்தன இடத்துல அல்லாஹ்தஆலா "மனிதர்களே!"ன்னு பொதுவா அழைச்சி சொல்றா(ன்) தெரியுமா..ம்மா?
"மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும், அருளும் வந்துவிட்டன". (அல்குர்ஆன் 10:57)
"இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில்தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்". (அல்குர்ஆன் 2:185)
"இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?" (அல்குர்ஆன் 54:17)
இந்த வசன‌ங்கள்லாம் யாரப் பார்த்துமா சொல்லுது? உலக மக்கள் எல்லோரையும் பார்த்து சொல்லுதே..ம்மா? நமக்கு மட்டுந்தான் குர்ஆன் உரிமைன்னு சொல்ல அது என்ன முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள‌ ப்ராபர்ட்டியான்னு கேட்கிறே(ன்)? "இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?"ன்னு அல்லாஹ் கேட்கிறானே... அந்த வாசகங்கள்லாம் முஸ்லிம்கள மட்டும் பார்த்து பேசுதுன்னு எப்படிமா நெனக்கிறீங்க..?

ஓரிறைக் கொள்கைய இதுவரைக்கு(ம்) ஏத்துக்காதவங்களும் இந்தக் குர்ஆன படிச்சுப் பார்க்கணும்.. அதுல ஏதாச்சும் குறைபாடுகளோ, மனித வாழ்வுக்கு தேவையற்ற விஷயங்களோ, ஒத்து வராத‌ சட்டங்களோ இருக்கான்னு பார்க்கணும்.. அதோடு, எந்த ஒரு அதிமேதாவியா இருந்தாலும் குர்ஆன்ல உள்ள மாதிரியான‌ வசனங்களபோல முக்காலத்துக்கும் பேசுற ஒரு வசனமாவது கொண்டு வரமுடியுமான்னு நல்லா சிந்திச்சுப் பார்த்து.. இது இறைவனோட வார்த்தைகள்தான்னு புரிஞ்சி.. இஸ்லாத்தோட‌ கொள்கைகள ஏத்துக் கொள்ளட்டும்னு முஸ்லிம் அல்லாதவங்களுக்கு அல்லாஹ் சொல்றானேமா?

மாற்று மதத்துகாரவங்க இறைவனுக்கு இணை வக்கிறதால தூய்மையான நிலயில இருக்கமாட்டாங்க, ஒளூச் செய்யவும் தெரியாது.  அப்படியே அத தெரிஞ்சி வச்சிருந்து ஒளூச் செஞ்சிருந்தாலும் அவங்ககிட்ட ஓரிறைப் பத்தின‌ நம்பிக்கை இல்லங்கிறதால‌ அது இறைவனால ஏத்துக்கொள்ளவும் படாது. இப்போ இந்த நிலயில.. நாம தூய இஸ்லாத்த அவங்ககிட்ட சொல்லணும்னு போனா.. முதல்ல அவங்களுக்கு குர்ஆன கொடுத்தாதான அத படிச்சிப் பார்த்துட்டு, அது சரியா தப்பான்னு வெளங்கி இஸ்லாத்த அவங்க ஏத்துக்க முடியும்? 'நாங்க சொல்ற தூய்மையான நிலயிலதா(ன்) இந்த குர்ஆன தொடணும்.. அதனால முதல்ல இஸ்லாத்துக்கு வந்துட்டு அப்புறமா குர்ஆன எடுத்துப் பார்த்து சிந்திச்சு பாருங்கன்னா சொல்ல முடியும்..? அப்படி சொன்னா படிச்சு பாக்காமலே அத எப்படி அவங்க ஏத்துக்குவாங்க சொல்லுங்க..? நம்ம ரசூலுல்லாஹ்வுக்கு பிறகு இஸ்லாம் மார்க்கத்த மத்தவங்களுக்கு எத்திவக்கிற‌ பொறுப்ப அல்லாஹ் நம்மகிட்டதானமா கொடுத்திருக்கா(ன்)..?

(மாற்று மதத்தவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என நினைத்து கவிதாவுக்கு கொடுக்காமல் இருந்த‌து தவறு என்பதை உணர்ந்த ரமீஸா சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு மகளுக்கு சமாதானம் சொன்னாள்.)

ரமீஸா: சரி.. காமிலா கண்ணு...! இந்த கோணத்துல..லாம் நா(ன்) யோசிச்சது கிடயாது. இன்னக்கிதானே இதெல்லா(ம்) நீ சொல்ற...? நா(ன்) கவிதாவுக்கு குர்ஆன கொடுக்காம இருந்தது போன வார‌ம்லடா..!

காமிலா: கவிதா'க்கு நீங்க குர்ஆன கொடுக்காம இருந்ததுக்கு, அவ‌ என் ஃப்ரெண்டுங்கிறதால நா(ன்) கோவப்பட‌லமா... கவி'ய பொறுத்த வரைக்கும் எதையும் நிதானமா, நேர்மையா சிந்திச்சு பார்ப்பா.. அவ‌......!..

வரட்டுப் பிடிவாதமாவும், வேணும்னே மனமுரண்டாவும் எதையாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லி இஸ்லாத்த விமர்சிட்டு கெடக்கிறாங்களே சிலபேரு... அதெல்லாம் அவளுக்கு பிடிக்காதுமா! ரொம்ப நாளா அவ‌ எங்கிட்ட குர்ஆன கேட்டுட்டே இருந்தா.. ஊருக்கு வரும்போது ரமலான் கிஃப்ட்டா கொடுக்கலாமேன்னு நாந்தான் கொஞ்சம் லேட் பண்ணிட்டேன் :(

குர்ஆன ஓதுறதுனால நன்மைகள நாம எப்படி அடைஞ்சிக்க முடியுமோ அதுபோல, குர்ஆன் சொல்லும் வார்த்தைகளோட‌ பொருளையும் படிச்சி நாம அதுக்கு கட்டுப்பட்டு நடக்கும்போது நேரான வழியை நாம் அடைஞ்சிக்கிறோம். இது எல்லா மக்களுக்கும் பொதுவானதுமா! இதுக்குதா(ன்) அல்லாஹ் நமக்கு குர்ஆன நபி(ஸல்) அவங்க மூலமா கொடுத்தானே தவிர, அத பட்டுத் துணியிலே சுத்தி பாதுகாத்து வக்கவோ, தொட்டு தொட்டு முத்தம் போட்டுக்கவோ, சுத்தமில்லன்னு காரணம் சொல்லி அத தொடக்கூட 'தடா' போட்டுக்கவோ அல்லமா!

ஷாஹினா: எனக்கு(ம்) இப்போதாங்க்கா மனசே ரிளாக்ஸா இருக்கு, அல்ஹம்துலில்லாஹ்! ஒனக்கு ரொம்ப தேங்க்ஸ்..க்கா! ஜஸாகல்லாஹ் ஹைரா! (சொல்லிவிட்டு நன்றி வாஞ்சையுடன் தன் சகோதரியை ஆரத் தழுவிக் கொண்டாள்.)

ரமீஸா: சரிமா காமிலா..! அந்த பலஹீனமான ஹதீஸ்கள பிரிண்ட் போட்டு தர்றேன்னு சொன்னியே... அத ஷாஹின்கிட்ட‌ கொடுத்துவச்சிடு. ஹஜ்ரத் சொன்னார்னு யாரும் வந்து சொன்னா, 'இதோ பாருங்க அந்த ஹதீஸ்களோட நிலமைய'ன்னு சொல்லி கையில கொடுக்கலாம்ல...?

காமிலா: கண்டிப்பா தர்றேம்மா..! நீங்க நல்ல முறையில புரிஞ்சிக்கிட்டதும் இப்போதாம்மா எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்குது... அல்ஹம்துலில்லாஹ்!

எல்லாவற்றையும் கேட்டு முடித்த ஷாஹினா, குர்ஆன் ஓத/படிக்க‌ தனக்கு இருந்த அந்த தற்காலிக தடையும் நீங்கிவிட்ட சந்தோஷத்தில், இரையை எதிர்ப்பார்த்து வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்து வேகமாக பறந்து வந்து கோழிக் குஞ்சை தூக்கிச் செல்வதுபோல் குதூகலமாக ஓடிவந்து குர்ஆனைத் தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, குர்ஆனை ஓத/படிக்க ஆரம்பித்தாள். தாயார் ரமீஸாவும் அவளுடைய ஆர்வத்தைப் பார்த்து அமைதியாய் சிரித்துக் கொண்டாள்.

{இந்த வருட ரமலானையும் (அல்லாஹ் உதவியால்) நல்லவிதமாக நிறைவேற்றி, அதன் கடைசி நாட்களில் இருக்கும் உங்களுக்கு கீழ்க்காணும் தலைப்புகள் உதவலாம், இன்ஷா அல்லாஹ்!}

நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்க‌துல் ஃபித்ர்)

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 1, 2, 3) 

மாற்றம் வேண்டாமே!

 

 

4 comments:

  1. சலாம் சகோ அஸ்மா,

    கட்டுரையின் மையக் கருத்துடன் நானும் உடன் படுகிறேன்... பெண்கள் எல்லா நாட்களிலும் குரானை தொடலாம்.. மாற்று மதத்தவர்களுக்கு குரான் கொடுக்கக் கூடாது என்பவர்கள் மூடர்களே....

    ReplyDelete
    Replies
    1. @ சிராஜ்

      சலாம் சகோ!

      //கட்டுரையின் மையக் கருத்துடன் நானும் உடன் படுகிறேன்...//

      இந்த மேட்டர் என்றில்லை சகோ. மார்க்கத்தில் எந்த விஷயமாக இருந்தாலும் அல்லாஹ்வும், ரசூலும் சொல்லியுள்ள கருத்திலும்கூட‌ உடன்படாத மாற்றுக் கருத்துடயவர்களுக்கு அல்லாஹ்தஆலா நேர்வழியைக் கொடுக்கவேண்டும்.

      //மாற்று மதத்தவர்களுக்கு குரான் கொடுக்கக் கூடாது என்பவர்கள் மூடர்களே....//

      நிச்சயமா சகோ :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர்...

    மாஷா அல்லாஹ்.. அருமையான கருத்துக்கள்... சிந்தித்து மாற்றிக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்...

    மூட நம்பிக்கையிலும், ஹஜ்ரத் மார்களின் தவறான வழி நடத்தலிலும் மூழ்கி கிடக்கும் ரமீசா போன்றவர்களுக்கு எப்பொழுது இது போன்ற தெளிவு வருமோ...

    வல்ல இறைவன் துணை புரிவானாக!!!!!

    ஜசக்கல்லாஹ் ஹைரன் சிஸ்..............

    ReplyDelete
    Replies
    1. @ யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்

      வ‌அலைக்குமுஸ்ஸலாம் யாஸ்மின்!

      //மாஷா அல்லாஹ்.. அருமையான கருத்துக்கள்... சிந்தித்து மாற்றிக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்...//

      அல்ஹம்துலில்லாஹ்! மாற்ற வேண்டியவர்கள் மாற்றிக் கொண்டால் சந்தோஷமே!

      //மூட நம்பிக்கையிலும், ஹஜ்ரத் மார்களின் தவறான வழி நடத்தலிலும் மூழ்கி கிடக்கும் ரமீசா போன்றவர்களுக்கு எப்பொழுது இது போன்ற தெளிவு வருமோ...

      வல்ல இறைவன் துணை புரிவானாக!!!!!//

      தொடர்ந்து சொல்வோம், துஆவும் செய்வோம் தோழி. அல்லாஹ்தஆலா உதவி செய்யட்டும்!

      //ஜசக்கல்லாஹ் ஹைரன் சிஸ்..............//

      வ இய்யாக :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை